
கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறாமல்
இருப்பதற்காக, இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம்
தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு
காலங்களில்... தினக்கூலிகள், ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்கள் உணவு
கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசும் தன்னால் முயன்ற உதவிகளைச் செய்து
வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் குடிக்க கஞ்சியாவது கிடைக்காதா என
ஏங்கிக்கொண்டிருந்த ஏழைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் மூன்று வேளையும் உணவு
கிடைத்தது. இளைஞர்களும் தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை இந்த
மக்களுக்கு செய்துவந்தனர்.
இத்தகைய
சூழலில்தான் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஏழைகளில் காதுகளில் இடியாய்
வந்து இறங்கியது. `சமைத்த உணவுகள், நிவாரணப் பொருள்களை வழங்குவதால் தனிநபர்
இடைவெளி பாதிக்கிறது. எனவே, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்
தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருள்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது"
என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலுமிருந்து பலத்த
எதிர்ப்பு கிளம்பியது.
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உரிய
வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத்தான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர,
யாருக்கும் தடை விதிக்கவில்லை. விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும்
இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து
செயல்படலாம் என அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுனாமி, பெரு வெள்ளம், புயல்
போன்ற பேரிடர் காலங்களில் மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருள்கள்,
வாழ்வாதாரம் போன்றவை இழந்துநின்ற காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும்
அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து
பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
இந்தப் பேரிடர், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும்
அறிவோம்.
இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார்
மூலம் பரவும் எனத் தெரியாத நிலையில், நோய்த் தொற்றை தவிர்க்க வேண்டும்
என்ற ஒரே நல்ல எண்ணத்தில்தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான
நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச்
சூழ்நிலையில், தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில்
உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும்,
நோய்த் தொற்று பரவுவதைத் தவிர்க்கவும், அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும்.
எனவே, புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவதுபோல்
தற்போது உதவி செய்ய ஆரம்பித்துவிட்டால், நோய்த் தொற்றுதான் அதிகமாகும்
என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதனால்தான், எந்த ஒரு
அமைப்பு நிவாரணம் வழங்கினாலும், அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித்
தலைவரிடமோ, மாநகராட்சி ஆணையரிடமோ, மண்டல அலுவலர்களிடமோ, நகராட்சியாக
இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால் செயல்
அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ
வழங்கலாம். மேலும், இத்தகைய உதவிகளைச் செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை
அதிகாரிகளையும் அணுகலாம்.
இதை விநியோகப்பதற்கென அரசால்
நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் அனைவருக்கும் சென்றடையும் வகையிலும்,
தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், சமைத்த உணவு
மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு,
அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இப்பணியில்
தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன்
இணைந்து ஈடுபடலாம். அதற்கென சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும்
கைபேசி எண்களும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவில் நிவாரணத்தை
ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில், ஒரு குழு
தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தைப் பயனுள்ள முறையில்
பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில்
ஏற்படுத்தப்பட்டு, இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுவருகின்றன.
நிவாரணம்
மற்றும் உதவிகள் வழங்கிட, 2,500-க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம்
தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்துகொண்டு, மாவட்ட
நிர்வாகத்துடன் இணைந்து, சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு
நெறிமுறைகளைக் கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டுதான்
இருக்கின்றனர். அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய
நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில்கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும்
பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.
சூழ்நிலைக்குத்
தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத்தான் அரசு
கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. விருப்பத்தோடு
வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள்,
மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் மக்களுக்கு
பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே
தவிர, தடை விதிக்கவில்லை என்து தெளிவுபடுத்தப்படுகிறது.
இந்நிலையில்,
எதிர்க்கட்சியினர், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி
செய்வதற்கு அரசு தடை விதித்துவிட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரசாரம்
செய்துவருகின்றனர். இதில், அரசு எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை. கொரோனா
வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை
புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
No comments:
Post a Comment