
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டுகிறது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன்முறையாக கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி உயரத்தை எட்டியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அடுத்த இரு தினங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே சரியத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு நேற்று விநாடிக்கு 24 ஆயிரத்து 36 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இது, மேலும் அதிகரித்து இன்று (அக். 12) காலையில், விநாடிக்கு 26 ஆயிரத்து 102 கன அடியாக உயர்ந்தது.
நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 98.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 99.10 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி விட்ட நிலையில் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு இன்று குறைக்கப்பட்டது.
டெல்டா பாசனத்துக்கு இன்று காலை 11 மணி வரை விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி என்ற அளவில் இருந்த நீர்த்திறப்பு, பின்னர் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
பாசனத்துக்கு நீர்த்திறப்பு குறைக்கப்பட்ட நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனிடையே, மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கான நீர்த்திறப்பு விநாடிக்கு 900 கன அடியாக நீடிக்கிறது. நேற்று 62.91 டிஎம்சியாக இருந்த அணையின் நீர் இருப்பு, இன்று 63.69 டிஎம்சியாக அதிகரித்துக் காணப்பட்டது.
No comments:
Post a Comment