
திண்டுக்கல் அருகே ரயில் விபத்தில் சிக்கிய நபரின் இடது காலை போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பிவைத்தனர்.
மதுரையில் இருந்து சென்னை வந்த தேஜஸ் ரயிலின் சக்கரத்தில் ஒருவரது இடதுகால் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் இருந்து கடந்த 6 -ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு எழும்பூருக்கு தேஜஸ் ரயில் புறப்பட்டது. அப்போது, அந்த ரயில் கொடைரோடு, திருச்சி ரயில் நிலையத்தை தாண்டி இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தது.

பின்னர், பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணிமனையில் நிறுத்தப்பட்ட போது, அந்த ரயிலை பணிமனை ஊழியர்கள் வழக்கம் போல் ஆய்வு செய்தனர்.அப்போது, ரயில் இன்ஜின் மற்றும் சக்கரத்துக்கு இடையே ஒருவரது கால் மட்டும சிக்கி இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே போலீசார், அந்த ஓற்றைக்காலை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் திண்டுக்கல் - வடமதுரைக்கும் இடையே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்துள்ளார். 2 கிலோ மீட்டர் தூரம் தேடியும் அவரது இடது கால் காணவில்லை என்று திண்டுக்கல் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
அந்த நபரது இடது கால்தான் சுமார் 450 கி.மீ தூரம் சக்கரத்தில் சிக்கிய படியே எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த இடது காலை பாதுகாப்பான முறையில், கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல் பெட்டியில் வைத்து திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment